சிலப்பதிகாரம் ''வேட்டுவ வரி''

அஃதாவது -
வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.
இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.



கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்  5
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்  10
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்  15
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது  20
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது  25
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு  30
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி  35
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்  40
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்  45
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்  50
பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்  55
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி  60
கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்  65
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை  70
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
 - உரைப்பாட்டுமடை.

வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன   1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;
செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்  2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;
மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்  3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்  4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;
ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்  5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;
பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்  6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்  7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்  8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்  9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக்,    10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப  11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;
உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை  12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;
கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்  13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர்  14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;
முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்  15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;
கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்  16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்  17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;
அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு  18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;
துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய  19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட  20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;
துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு  21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;
பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்  22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய  23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.
















Category: 2 comments

ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி! 

" முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங்காமையின் ...............................
..................................................................
................................. பாண ! தங்காது
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே."

(புறநானூறு : பாடல் : 320

பாடியவர் : வீரைவெளியனார்)

பொருள் விளக்கம் :


கைம்மான் = யானை. கனைதுயில் = மிக உறக்கம்.

பார்வை மடப்பிணை = விலங்கினமான இளம் பெண்மான்.
கலை = ஆண்மான். இல்வழங்காமையின் = இல்லத்தை விட்டு வெளியே நடமாடாமல் ஒருபுறம் ஒதுங்கி அமைதல்.
தங்காது = குறையாமல். வேந்துதரு விழுக்கூழ் = தனக்குப் பகை வேந்தர் கப்பமாகத் தந்ததும், தன் வேந்தர் தந்த பரிசுப் பொருளும்.

குறிப்பு : வீரைவெளியனார் தோன்றிய வீராம்பட்டினம் புதுவைக்கு அருவே உள்ளது என புறநானூறு உரை கண்ட அறிஞர் ஒளவை துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.


வீராம்பட்டினமென்பது புதுவைக்கருகில்

விளங்கிடும் ஊராம் - புலவர் பிரான்
வீரைவெளியனார் தோன்றிய இடமென, இதனை
விளக்குவர் அறிஞர்!
தித்திக்கும் கவிதை தீட்டி அகத்துறையில் புகழ்பெற்ற
தித்தனார் எனும் கவிஞர் இவர் பெற்ற மகனேயாவார்.
திறன்மிக்க மகனை ஈன்ற வெளியனாரும்
புறப்பாட்டில் ஒரு புதுமைதனைக் காட்சியாக்கி,
வேட்டுவர் இல்லத்துப் பெண்விளக்கின் மாண்புதனைக்
காட்டுகின்றார் கவிதை ஒளிக் காவியமாய்!

வேந்தனிடம் விடைபெற்றுக் களம் சென்ற தளபதி

வெற்றியினை மாலையாக்கிச் சூடிக்கொண்டு
விருதுபல பெற்று வீரக்கொடி விண்தவழ
வீடு திரும்பினான் என்ற செய்தி கேட்டு - அவனைப்
பாடிப் பரிசில் பெற பாணன் ஒருவன் சென்றபோது - அவன்
நாடி வந்த தளபதியின் நல்நெஞ்சக் கொடை இயல்பை
நற்றமிழில் பாடுகின்றார், வீரை வெளியனார்.

வெற்றி பெற்ற நாட்டுப் பொருள்களையும் - நமது

வேந்தர் வழங்கியுள்ள விருதுப் பொருள்களையும்
ஈந்து சிவந்திட இரு கரமும் கொண்டவன்தான்
பாய்ந்து பகைவீழ்த்தி வந்துள்ள வீரன் எனப் புகழ்ந்து - அன்பு
தோய்ந்து இதயமுடன் அள்ளித் தருவான் பரிசுகளை என்று,
ஆழ்ந்து அறிவுசால் வீரைவெளியனார், பாணர்க்கு அறிவித்து மகிழ்ந்து,

அவ்வூரின்கண் அரும்பிமலர்கின்ற

அழகு மகளிர் பண்பு நலமும் பாடுகின்றார், கேளீர்!

முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும்

பின்னிப் படர்ந்து விரிந்து பரந்ததால்
பந்தல் என ஒன்று வேண்டாம் வெயில் மறைக்க என
பலாக்கனிகள் தொங்குகின்ற அடர் மர நிழலில் கீழே

வேடனொருவன் உறக்கத்தைத் தழுவிக்கொண்டு,

வேல்பிடித்த கரத்தைக்கூடத் தளர்த்திக் கிடந்தான்.
வேலுக்குப் பதிலாக அவனருகே படுத்துக்கொள்ள
சேலுக்கு இணையான விழிபடைத்த அவன் துணைவி, விருப்பங்கொண்டு;

மெல்ல நடந்து இல்லத்துக்குள்ளிருந்து - அந்த

வெல்லப்பாகு இதழாள்; கொடிப்பந்தல்தனைக் கூர்ந்து நோக்குகின்றான்.

களைப்புற்ற கணவனருகில் ஒரு மலர் போல ஒலியின்றி பட்கார வேண்டுமென்றும்,

கண்களின் பசி தீர அவன் கட்டழகைப் பார்த்துக் களித்திட வேண்டுமென்றும்,

தாமரை மொட்டிரண்டைச் சற்றுத் தாமதாய் அவன்

தடந்தோளின் பக்கம் திருப்பினால் போதுமென்றும்,
அவசரப்பட்டு ஒரு முத்தம் அரும்பு மீசை உதட்டின்மேல்
அளித்துவிடின், அவன் விழித்துக்கொள்ள நேருமென்றும்,
ஆனைகளை வேட்டையாடி அயர்ந்து தூங்கும்
ஆளனது ஓய்வு கலைத்தல் அவன் உடல் நலனுக்கு ஆகாதென்றும்,

முழுத் தூக்கம் முடியட்டும்; பின்னர் காலைக்கதிர்

எழுமட்டும் முடியாமல் தொடரலாம் இன்பமென்றும்,
தொலைவில் நின்று அத்தோகை நல்லாள் - காற்றில்
அலை அலையாய் எழுகின்ற கருங் கூந்தல் கோதி,
எண்ணமிட்டு நின்றிருந்தாள் - அவள்
வண்ணமிட்ட மார்பகமோ உயர்ந்துயர்ந்து உயிரை வாங்கித்
தணிந்து, பின்னும் உயர்ந்தெழுந்து மேன்மேலும் அவள்
தணியாத தாபத்தை வெளிப்படுத்தும்!
துணிந்து சென்று சென்று அவன்மேல் வீழ்ந்துவிட்டால் - நல்ல
தூக்கத்தைக் கலைத்த குறை, அவள் மனதைக் குடையும்!

அதனாலே


அவனருகிற் சென்று அசையாமல் படுத்துக்கொண்டு

அயர்வு நீங்கி அவன் விழிப்புற்றுப் புரளும்போது;
அத்தான் என அழகு விரல்களாலே முகம் தடவி
முத்தாக ஒரு முதூதம் கொடுப்பதென முடிவு கட்டி,
காட்டு வழியில் தேய்ந்து காய்த்துப்போன கால்களையும்
காய்ந்த சருகுகளின் மேல் பூப்போல ஓசையின்றி ஊன்றி,
விழிமூடித் துயில் கொள்ளும் வேடனிடம்; தொப்புள்
சுழியின் எழில் மூடாமல் சுகந்தமிகு வசந்தமென நடக்கலுற்றாள்!

அப்போது,


பலாக்கனிகள் குலுங்குகின்ற மரநிழலில்

படர்ந்திருக்கும் கொடிகள் நிறை இலைமறைவில்
படுத்திருக்கும் வேடனுக்கு மிக அருகாமையில்
தடுத்துரைத்த பெண்மான் ஒன்றைத் தழுவிக்கொண்டு
ஆண்மான் தந்த அருஞ்சுகத்தை, இழப்பதற்கும் மனமின்றி, - அந்தப் பெண்மான்
வீண் முயற்சி எடுத்து மீண்டும் தடையொன்றும் சொல்லாமல்,
இருமானும் இன்பத்தின் உச்சியிலே மிதந்து
தருநிழலில், தவமிருந்து வரம்பெற முனைவோர் போல - தலைமறந்த நிலையுற்ற,
இயற்கையின் திருக்கூத்தை அந்த இல்லத்தரசி
இருவிழி கொட்டாமல் பார்த்தயர்ந்தாள் !

உடனே


அவளுக்கோர் அச்சம் உள்ளத்தில் வெளிச்சமிட

அப்பால் ஓர் அடிதனை எடுத்து வைக்கவும் தயக்கமுற்றாள்!

பலாமரத்து இலைச்சருகுகளில்

படர்ந்துள்ள கொடியுதிர் மலர்களில் - தனது
பாதம் படுகின்ற சிறிய ஒலி கூட;
இசை மூடி இவ்வுலகை மறந்து துயில்கின்ற
இளமை மிகு வேடனையே எழுப்பிவிட்டால்,
ஆர்த்தெழுகின்ற அவன் தோற்றம் கண்டு - காதல்
போர்க்களத்து வெற்றிக்குப் போட்டியிடும்
ஆண்மானும் பெண்மானும் அடைய இருந்த இன்பமெலாம்
ஊண் பொங்கும் நேரத்தில் உலைப்பானை கவிழ்ந்தது போலாகி
ஓடி உயிர் காத்துக் கொண்டாலே போதுமென இருமானும்
வாடிப் பிரிய நேரிடுமே எனவும் எண்ணினாள்; அல்லது
வேடன் எழுந்தவுடன் அருகிருக்கும், தனது
வேலை எடுத்து வீசிவிட்டால் - காதல்
பாடந்தனைச் செயல் மூலம் பயிலுகின்ற ஈருயிரும்
கலவி நடுப்பாதையிலே பலியாக வேண்டும் என்றும்
கவலை மிகக் கொண்டுவிட்டாள்!

இவையிரண்டு தீங்கினையும் தவிர்ப்பதற்குத் தக்க வழி

இங்கேயே நான் மறைந்து நிற்பதுதான், என்று
அசையாத சிலைபோல இருந்துவிட்டாள் - தெவிட்டாத
இசைபோல வீசும் தென்றல்; அவள் பண்பை வாழ்த்திப் பாடிற்றாங்கே!
மானினத்தின் உணர்வுக்கு மதிப்பளித்துக் கருணைதனை
மழையாகப் பொழிகின்ற மாதரசு வாழ்கின்ற இவ்வூரில்
மானிடராம் பாணர்க்குப் பரிசு இல்லை என மறுப்போர் உண்டோ?
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியைப்
பாவை இவள்தான் மெய்ப்பிக்கின்றாள் என்று
பாணர்க்கு அவ்வூரின் பண்பாட்டை வீரவெளியனார் எடுத்துக்காட்டி
பரிசுபெறச் சென்றிடுவீர் பகைமுடித்த தலைவனிடம் எனக்கூற
விரைந்திட்டார் வேகமாகப் பாணர்; வீர
வெளியனார்க்கு நன்றியினைக் குவித்தவாறு!


எழுதியவர் :கருணாநிதி 

Thank you sir...

Category: 0 comments

 

பெரிய புராணம்

வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும் கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசையன்றிச்
சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்கூடிக்
கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவியெங்கும்.
வெல்லும் படையும், தறுகண்மையும், கூடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் எங்கும் கொல், எறி, குத்து, என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல் சிலவாய பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய ஆகுளியும் (சிறுபறையும்) சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும் உள்ளன. என்பது இதன் பொருளாகும். ஆகுளி, சிறுகணாகுளி எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே துடியினை விட ஆகுளி சிறிய முகமுள்ளன என அறியலாம். இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின்போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத்திருவிழாக்களிலும் பயன்பட்டன.

கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம் மாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ்
சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங்
காடு கொண்டெ ழுந்த வேடு கைவ ளைந்து சென்றதே.
வேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர் பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முற்ம்ற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.
Category: 0 comments